கிறிஸ்து பிறப்பின் பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் ? - மரியாளின் வாழ்வில் இருந்து




 முன்னுரை

          கிறிஸ்து பிறப்பு பண்டிகை என்றாலே நம் எல்லோருக்கும் ஒருவித மகிழ்ச்சி. மற்ற எல்லா பண்டிகைகளை காட்டிலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஆயத்தமும் ஏற்பாடுகளும் அதிகமாகவே இருக்கும். இப்படி கிறிஸ்து பிறப்பின் பண்டிகையை கொண்டாட ஆயத்தம் ஆகும் நாம், இயேசுவின் தாயாகிய மரியாள் எப்படி கிறிஸ்து பிறப்பை கொண்டாடினார் என்பதை வேதாகமத்தில் இருந்து அறிந்துக்கொண்டு, அதன்படி கொண்டாடுவோம்.

ஆண்டவருக்கு அடிமை:

           கிறிஸ்து பிறக்கப்போகிறார் என்கிற  செய்தியை தேவதூதன் வாயிலாக மரியாள் கேட்ட உடனே, அவர் கூறின இந்த வார்த்தையை லூக்கா எழுதிய சுவிஷேச நூல் 1-ஆம் அதிகாரம் 38-வது வசனம் அலங்கரிக்கிறது.

‘‘அதற்கு மரியாள்: இதோ நான் ஆண்டவருக்கு அடிமை என்றாள்”.

           அடிமை என்கிற வார்த்தைக்கு இந்த காலத்தில் ஒருவேளை நமக்கு அர்த்தம் தெரியாமல் இருக்கலாம். மரியாள் ஆண்டவருக்கு அடிமை என்று கூறின அந்த காலகட்டத்தில் அடிமைத்தனம் இருந்தது. ஒரு முதலாளிக்கு அடிமையாக சென்றுவிட்டால் அடிமைக்கு எந்த உரிமையும் கிடையாது முதலாளியின் கட்டளைகளின்படி தான் நடக்கவேண்டும்.  முதலாளி நல்ல குணம் உள்ளவராக இருந்தால், அடிமை தப்பித்தான் மாறாக கெட்டகுணம் உள்ளவராக இருந்தால் அவ்வளவு தான்.

         நம்முடைய வாழ்வில் ஆண்டவரை (கர்த்தர்) தவிர ஒரு நல்ல முதலாளி கிடையாது என்பதை  அறிந்துக்கொண்ட மரியாள் ஆண்டவருக்கு அடிமை என்று தன்னை அர்ப்பணித்தாள்.

       நாமும் ஆண்டவருக்கு அடிமை என்று நம்மை அர்ப்பணித்து அவருடைய வழிகளில் நடப்போம்.

எலிசபெத்துடன் சந்திப்பு:

           மரியாள் ஆண்டவருக்கு அடிமை என்று தன்னை அர்பணித்த  பிற்பாடு  தனது உறவினராகிய எலிசபெத்தை சந்திக்க  சென்றாள்.

லூக்கா 1:39  அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய்,

40. சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.”

          நாம் பிறருடன் எப்படி பழகுகிறோம் என்பதை வைத்துதான் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை அமைகிறது. நாம் விசுவாசிப்பதற்கு மட்டும் அல்ல, ஒன்றுபடவும் அழைக்கப்பட்டு இருக்கின்றோம். நாம் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பது கிறிஸ்துமஸ் கிடையாது. இந்த பண்டிகை நாள்களில் நம்முடைய உறவினர்களிடம், சபையினரிடம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் நம்முடைய உறவுகளை வலுப்படுத்த   மரியாளை போல் தீவிரமாய் செயல்படுவோம். அவர்களை வாழ்த்துவோம்.

இயேசுவின் ஆலய பிரதிஷ்டை:

           மரியாள் இயேசுவை எட்டாம் நாளில் பிரதிஷ்டை செய்ய ஆலயத்துக்கு கொண்டு சென்றாள்.

லூக்கா 2:24  "கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.’’

           அந்த காலத்தில் ஏழைகள் தான் பலிசெலுத்த புறாவை கொண்டு செல்வார்கள். வசதிப்படைத்தோர் ஆட்டுக்குட்டியைக்  கொண்டு செல்வார்கள்.

லேவியராகமம் 12: 8  ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்குச் சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள்.”

            மரியாள் இடத்தில் நம்மை வைத்து கற்பனை செய்து பார்போம். முதல் குழந்தை, அதுவும் ஆண் குழந்தை, தேவதூதர்களால் வாழ்த்து பெற்ற குழந்தை. கடனை வாங்கியாவது ஆட்டுக்குட்டியை வாங்கி கொண்டு சென்று இருப்போம்.

          பிரியமானவர்களே கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நாம் எவ்வளவு வீண் செலவு செய்கிறோம்.

மரியாள் புறா கூட வாங்க காசு இல்லாதவள் அல்ல.

ஆட்டுக்குட்டியை  வாங்க கடன் வாங்குகிறவளும் அல்ல.

இருப்பதை வைத்து சிறப்புடன் கிறிஸ்துவை கொண்டாட கற்றுக்கொண்ட ஸ்திரிகளுக்குள்ளேயே ஆசீர்வதிக்கப்பட்டவள்.

 

நாமும் கிறிஸ்து பிறப்பை

  • ஆண்டவருக்கு கீழ்ப்படிந்து
  • உறவுகளை வளர்க்க தீவிரம் காட்டி
  • இருப்பதை வைத்து சிறப்புடன் கொண்டாடுவோம்

 

உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக

-  லூக்கா 2:14.

 

 


Comments

Popular posts from this blog

திருச்சபைகளின் நூலகங்களுக்குப் புத்துயிர் கொடுப்போம்

மிகச் சிறந்த வரலாற்றைக் கொண்ட கல்கோவில் நாளை திறப்பு

கர்த்தர் ஒரு பாலூட்டும் தாயை பேன்றவர்